கிழக்கான் ஆளுபவன் அல்ல ஆளப்படுபவன்” – சபீக் ரஜாப்தீன்
Rasmy Galle
கிழக்கு மாகாண முஸ்லிங்கள் தொடர்பான சபீக் ரஜாப்தீன் அவர்களின் கேடு கெட்ட கருத்துக்களை வாசித்தேன். இது போன்ற பிரதேச வாத சிந்தனைப் போக்குள்ளவர்களா எம்மைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்கின்றார்கள் என்பதனை நினைக்கும் போது பெரும் கவலையாக இருந்தது.
“கிழக்கான் ஆளுபவன் அல்ல ஆளப்படுபவன்” என்று எந்த அடிப்படையில் இந்த ரஜாப்தீன் போன்றவர்கள் கருத்துக்களைக் கூறுகின்றார்களோ தெரியாது. என்னைப் பொருத்தவரை அரசியல் விழிப்புணர்வு மிக்க ஒரு முஸ்லிம் சமூகம் இருக்குமானால் அது கிழக்கு மாகாண முஸ்லிங்கள் தான். சாதாரணம் வரை படித்த ஒருவரும் கட்சி ஒன்றைப் பதிவு செய்து ஆரம்பிக்கும் அளவுக்கு அரசியல் தொடர்பான அறிவைப் பெற்றிருப்பார்கள்.
அரச நிர்வாகவியல் தொடர்பான அறிவிலும் ஏனைய மாகாண முஸ்லிங்களை விட கிழக்கு மாகாண முஸ்லிங்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள். இப்படியிருக்க, கிழக்கு மாகாணத்தினைச் சாராத ஒருவரை முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்திற்கு அமர்த்தி அழகு பார்க்கின்றார்கள் என்றால் அது கிழக்கு மாகாணத்தில் அரசியல் தலைமைத்துவம் வழங்கப் பொருத்தமானவர்கள் இல்லை என்று தப்பாக அபிப்பிராயம் கொள்ளக் கூடாது, மாற்றமாக அது அவர்களின் பெருந்தன்மையினையும், எல்லா முஸ்லிங்களையும் “உம்மத்” என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் அவர்களது உயர்ந்த மனப்பாங்கையும் பறைசாட்டுகின்றது.
பிரதேச வாதம் என்ற பேச்சு வரும் போது அதற்கு உதாரணமாக கிழக்கு மாகாணத்தினை எப்போதும் உதாரணம் காட்டும் பழக்கம் ஏனைய மாகாண முஸ்லிங்கள் பலரிடம் உள்ளது. ஏதோ ஏனைய மாகாண முஸ்லிங்கள் அனைவரும் கட்டிப் பிடித்து முஆனகா செய்து கொண்டு கொஞ்சிக் குழாவி வாழ்பவர்கள் போன்று. வந்து பார்த்தால் தான் தெரியும் பிரதேவாத த்தினையும் தாண்டி நாய்கள் போன்று “தெருவாதம்” கூட எல்லா ஊர்களிலும் உண்டு. “சீதனம்” பற்றிப் பேசும் போதும் கிழக்கு மாகாணத்தினை சிலர் உதாரணம் கூறுவார்கள்.
ஏதோ ஏனைய மாகாண முஸ்லிங்கள் சீதனமே எடுக்காமல் சொந்தமாக வீடு கட்டி கல்யாணம் முடிக்கின்றவர்கள் போன்று. ஒரு டாக்கராகிவிட்டால் போதும், கல்யாணம் முடிக்கு முன்பே கார், கொழும்பில் ஒரு வீடு, 100 பவுண் தங்கம்,கொழும்பில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கல்யாண வைபவம் என்று விலை போகும் எத்தனை டாக்டர் மாரை தென் மாகாணத்தில் கண்டிருக்கின்றேன். ஆரம்பத்தில் ஓகே ஆகி பல கொடுக்கல் வாங்கல்களின் பின் கடைசிக் கட்டத்தில் தோல்லியில் முடிவடையும் எத்தனை கல்யாணப் பேச்சுவார்த்தைகளைக் கண்டிருக்கின்றோம். ஆக, சீதனம், பிரதேசவாதம் எல்லா முஸ்லிம் ஊர்களிலும் உண்டுதான்.
கிழக்கு மாகாண சகோதர்ர்களின் பெருந்தன்மையினை நான் முதன் முதலில் அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டது பல்கலைக்கழகத்தில் வைத்துத் தான். என்னை விட பல மடங்கு அறிவு மற்றும் அனுபவத்தில் சிறந்த நிறைய கிழக்கு மாகாண சகோதர்ர்கள் எமது பல்கலைக்கழகத்தில் இருக்க, என்னிடம் எதனைக் கண்டார்களோ தெரியாது என்னை முஸ்லிம் மஜ்லிஸின் தலைவராக்குவதில் கிழக்கு மாகாண நண்பர்களும் அதிக பிரயத்தனம் எடுத்தார்கள்.
தேசிய ரீதியிலும் இப்படித்தான். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்திலும் கிழக்கு மாகாணத்தினைச் சாராதவர்கள் தலைமைத்துவத்தில் இருந்தாலும் அந்த தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு நடப்பது அவர்களது உயர்ந்த குணத்தினையே காட்டுகின்றது. இந்தப் பக்குவம் ஏனைய மாகாண முஸ்லிங்களிடம் போதியளவு இல்லை என்பதே எனது நிலைப்பாடு.
30 வருட கால யுத்தத்தின் அனைத்து வடுக்களையும் சந்தித்தவர்கள் கிழக்கு மாகாண முஸ்லிங்கள். ஆக, யுத்த்த்தின் பின்பு தமது இழப்புக்களை மீளப் பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் சுயநலத்துடன் செயற்பட்டிருக்க முடியும். அதனைக் குற்றமாகவும் கூற முடியாது. ஏனெனில் யுத்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள். ஒரு குண்டுச் சத்தத்தினையாவது வாழ்க்கையில் நேரடியாக்க் கேட்காதவர்களே ஏனைய மாகாணங்களில்பெரும்பாலானவர்கள் உண்டு.
அழுத்கமவில் 2 சகோதர்ர்கள் கொல்லப்பட்டதற்கே நாம் துடிதுடித்துப் போனோம். ஆனால் கிழக்கு முஸ்லிங்கள் நூற்றுக்கணக்கான சகோதர்ர்களை யுத்த்த்திற்குப் பலி கொடுத்தார்கள். கோடிக் கணக்கான சொத்துக்களை இழந்தார்கள். மிகவும் சுயநலமாக செயற்படுவதற்கான நியாயங்கள் அவர்களிடம் இருந்தாலும் அவர்கள் அவ்வாறு நடக்காமல் தேசிய ரீதியாக அனைத்து முஸ்லிங்களையும் கருத்திற்கொண்டு செயற்படுகின்றார்கள்.
அழுத்கம சம்பவத்திற்கு எதிராக தமது வியாபார நிலையங்களை பூட்டி ஹர்த்தால் செய்த ஒரே மாகாணம் கிழக்கு மாகாணம் தான். தமது பிரதேசங்களை அபிவிருத்தியடையச் செய்த ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லாஹ் போன்ற செல்வாக்கு மிக்க அரசியல் வாதிகளையும், அழுத்கம பிரச்சினையின் பின்னர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக நின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தேர்தலில் வீட்டுக்கு அனுப்பி வைத்தவர்கள். அனர்த்தங்களின் போது பொருட்களையும், நிதிகளையும் சேர்த்து அள்ளிக் கொண்டு வருவதிலும் அவர்கள் முன்னணியில் இருக்கின்றார்கள்.
எமது கிந்தோட்டைப் பிரச்சினையின் போதும் முதல் நாளே களத்திற்கு வந்த விடிவௌ்ளி ஆசிரியர் பைறூஸ் ஆக இருந்தால் என்ன? என்.எப்.ஜீ.ஜீ கட்சியின் உறுப்பினர்களான பிர்தௌஸ் நளீமி, அப்துர் ரஹ்மான், சிராஸ் மஷ்ஹூர் போன்றவர்கள், என்னோடு தொடர்பு கொண்டு உடனடியாக களத்திற்கு சட்டத்தரணிகள் கொண்ட ஒரு குழுவொன்றை அனுப்பி வைத்து சட்ட ஆலோசனை வழங்கிய Raazi Muhammadh Jaabir போன்ற சகோதர்ர்கள் என பெரும்பாலானவர்கள் கிழக்கு மாகாணத்தவர்களே.
எல்லாவற்றையும் விடுவோம். எமது முகநூல் களத்தினையே கொஞ்சம் அவதானித்துப் பார்ப்போம். முகநூலில் பல தலைசிறந்த எழுத்தாளர்கள், நகைச்சுவை எழுத்தாளர்கள், மொக்கை எழுத்தாளர்கள் என்று கிழக்கு மாகாண சகோதரர்கள் தாராளமாக இருக்கின்றார்கள். காத்தான்குடி, ஏறாவூர் ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள். முகநூலில் அவர்களுக்கு ஏனைய மாகாண முஸ்லிங்களைப் புறக்கணித்து விட்டு அவர்கள் மாத்திரம் உறவுகளைப் பேணி செயற்படலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு இருப்பதில்லை. எல்லோருடனும் கலந்துறவாடி, சீரியஸான நேரத்தில் சீரியஸாகவும், நகைச்சுவையான நேரத்தில் நகைச்சுவையாகவும் மிகவும் கலகலப்பாக நடந்து கொள்வார்கள். இந்தக் கலகலப்பினை நான் நான் கிழக்கு மாகாண சகோதர்ர்களிடம் அதிகம் கண்டிருக்கின்றேன். என்னைப் போன்ற சாதாரண எழுத்தாளர்களையும் அடிக்கடி சுகம் விசாரித்து,தொடர்ந்து எழுதுமாறு ஊக்கப்படுத்துவார்கள்.
எனது பதிவொன்றுக்கு எனது ஊரில் இருந்தும், காலியில் இருந்தும் ஆகக் கூடினால் ஒரு 10 லைக்ஸ் வரும். அதற்காக அவர்கள் வாசிப்பதில்லை என்று அர்த்தம் இல்லை. ஒன்றையும் விடாமல் வாசிப்பார்கள். ஆனால் லைக்ஸ் செய்வதற்கு அவர்களுடைய மனதில் உள்ள ஏதோ ஒன்று அவர்களைத் தடுக்கும். அத் தன்மை கிழக்கு மாகாண சகோதர்ர்களிடம் இல்லை. பெரும்பாலான விருப்புக் குறிகள் கிழக்கு மாகாண சகோதர்ர்களுடையது தான். இப்படி கிழக்கு மாகாண சகோதர்ர்களின் நல்ல பக்கங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆக, சபீக் ரஜாப்தீன் அவர்களின் மிக்க் கேவலமான பிரதேசவாதக் கருத்துக்களுக்கு எதிரான கண்டனங்களை ஒரு காலியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவனாக பதிந்து கொள்கின்றேன்.
